Thursday, 2 June 2011

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வைகோ பேச்சு

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், இடதுசாரி பசுமைக் கட்சிகள், தமிழ் ஈழ மக்கள் அவைகளின் அனைத்து உலகச் செயலகம் ஆகியவை இணைந்து ஈழத்தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை குறித்த கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தன. ஐரோப்பிய ஒன்றிய நாடாளு மன்றக் கட்டடத்தில், நடந்த இந்த கூட்டத்தில் வைகோ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது.
 
ஈழத்தமிழ் மக்களுக்கும் வசந்தம் விடியட்டும். உலகின் ஜனநாயக நாடுகள் அதற்கு வழிகாட்டட்டும். ஈழத்தமிழரின் கண்ணீரை, உலக நாடுகள், பல ஆண்டுகள் கண்டு கொள்ளவில்லை. ஐரோப்பிய நாடாளு மன்றத்தில் இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியதற்காக, நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.  
ஈழத்தமிழர்கள்தான், இலங்கைத் தீவின் வடக்குகிழக்கு பகுதிகளின் பூர்வீகக் குடிமக்கள். சுதந்திர அரசு அமைத்து, தனித்துவமான நாகரிகத்தோடு வாழ்ந்தனர். அவர்கள்தான் பூர்வீகக்குடி மக்கள் என்று, இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, இந்திய நாடாளுமன்றத்தில் ஆற்றிய தன் கடைசி உரையில் குறிப்பிட்டார். போர்த்துகீசியர் படை எடுத்தனர். 1619-ல் தமிழர்கள் தங்கள் அரசை இழந்தனர். 1638-ல் டச்சுக்காரர்கள் தமிழ் ஈழத்தைக் கைப்பற்றினர்.
 
பின்னர், 1796-ல் பிரித்தானியர்கள் வந்தனர். நிர்வாக வசதிக்காக, தமிழர்களையும், சிங்களவர்களையும் தங்கள் காலனி ஆட்சியின் கீழ் ஒன்றாக்கினர். 1948 பிப்ரவரி 4-ல் பிரித்தானியர்கள் இலங்கைக்கு சுதந்திரம் தந்தபோது, அதிகாரத்தை சிங்களவர்களிடம் ஒப்படைத்தனர். 
 
யாராவது ஒரு சிங்களப் பெண்ணை, விடுதலைப்புலிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக ராஜபக்சே கூட்டம் கூடச் சொன்னது இல்லையே? அப்படி அவர்கள் நடந்து கொண்டதாக யாராவது நிரூபித்தால், நான் தமிழ் ஈழத்தை ஆதரித்துப் பேசுவதை விட்டு விடுகிறேன். தமிழ் ஈழம் சுதந்திர தேசமாவதற்கு வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அனைத்து நாடுகளின் பார்வை யாளர்களின் கண்காணிப்பில் நடத்தப்பட வேண்டும். வெளிநாடுகளில் உள்ள ஈழத் தமிழர்களும், அந்தந்த நாடுகளிலேயே பங்கேற்க ஏற்பாடு செய்ய வேண்டும். 

No comments:

Post a Comment